search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்கானிக் கொலை"

    • மெக்கானிக் கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் பழைய காலனி பகுதியை சேர்ந்த வீரய்யா என்பவர் மகன் பிரகாஷ் (வயது 21). இவர் பழங்காநத்தம் பகுதியில் செயல்படும் ஒரு ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. பிரகாசின் நண்பர்களான அவர்கள் முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதனை கண்ட பிரகாசின் சித்தி வாசுகி என்பவர் தடுக்க முயன்றார். அப்போது அவரது கழுத்தில் கத்தியால் குத்த முயன்றனர். அவர் தப்பி செல்ல முயன்றதால் காலில் கத்திக்குத்து விழுந்தது. இதற்கிடையே கத்திக்குத்து பட்ட பிரகாஷ் வீட்டிற்குள் சென்று விட்டார். இதனால் 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதைத்தொடர்ந்து கத்திக்குத்து காயம் அடைந்த பிரகாஷ் மற்றும் வாசுகியை 108 ஆம்புலன்சு மூலம் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் வாசுகி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பிரகாசை கொலை செய்த 6 பேரும் பிடிபட்டனர்.

    போலீசாரின் விசாரணையில் 6 பேரும் சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசாரிடம் 6 பேர் கும்பல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் உள்பட நாங்கள் 7 பேரும் ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் எங்கள் 6 பேரையும் தாக்கி விட்டார். இதனால் அவரை பழி வாங்க வேண்டும். அவருக்கு மரண பயத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தோம்.

    ஆனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கருதவில்லை. அவரை நேற்று பார்த்ததும் ஆத்திரம் அடைந்த 6 பேரும் சரமாரியாக கத்தியால் குத்தினோம். இதில் அவர் இறந்து விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமமூர்த்தியின் உறவினரான முத்துசெல்வி வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது குறித்து ராமமூர்த்தி கூறினார்.
    • இதையடுத்து முத்துசெல்வி மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அந்த வாலிபர்களிடம் சென்று தகராறு செய்தனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டகுடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது38), டி.வி. மெக்கானிக். இவர் கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தில் வசித்துவரும் தனது உறவினரான முத்துசெல்வி வீட்டில் தங்கி இருந்தார்.

    அந்த வீட்டின் முன்பகுதியில் ஒரு புளியமரம் உள்ளது. அந்த மரத்தில் வாலிபர்கள் சிலர் கொக்கு பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று மதியம் வழக்கம்போல் அந்த வாலிபர்கள் சிலர் கொக்கு பிடிக்க வந்துள்ளனர்.

    அப்போது அங்கிருந்த ராமமூர்த்தி, இங்கெல்லாம் கொக்கு பிடிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் அந்த வாலிபர்களுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் ராமமூர்த்தியின் உறவினரான முத்துசெல்வி வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது குறித்து ராமமூர்த்தி கூறினார். இதையடுத்து முத்துசெல்வி மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அந்த வாலிபர்களிடம் சென்று தகராறு செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியது. தொடர்ந்து அந்த வாலிபர்கள், ராமமூர்தியை கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்து முத்துசெல்வி அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ராமமூர்த்தி கொலை குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அழகாபுரியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழி (23), சிந்தனை செழியன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கொக்கு பிடிப்பதெற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததால் ராமமூர்த்தியை அடித்து கொன்றதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். மெக்கானிக் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அலங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×